×

சென்னை விமான நிலையத்தில்தீ விபத்து தடுப்பு ஒத்திகையால் பரபரப்பு: தத்ரூபமாக இருக்க திடீர் நடவடிக்கை

மீனம்பாக்கம், ஏப். 20: தீயணைப்பு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் திடீரென நடத்தப்பட்ட தீ விபத்து தடுப்பு ஒத்திகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் நேற்று மதியம் திடீரென அபாய எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓடுபாதையின் மேற்கு முனை பகுதியில் ஏதோ ஒரு பொருள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக சென்னை விமான நிலைய தீயணைப்பு வண்டிகள், மருத்துவ குழுவினர், அதிரடிப்படை வீரர்கள், விமான பாதுகாப்பு படையினர், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மீட்புக் குழுவினர் ஸ்டிரெச்சர்களில் சிலரை தூக்கிக் கொண்டு வந்து, மருத்துவ குழுவினரிடம் ஒப்படைத்தனர். அங்கு எரிந்து கொண்டிருந்த தீ சிறிது நேரத்தில் அணைக்கப்பட்டது. அங்கிருந்த பழைய இரும்பு பொருட்கள், பழைய கழிவுகள் அனைத்தும் போடப்பட்டு தீக் கொளுத்தப்பட்டிருந்தது தெரிய வரவே, சிறிது நேர பரபரப்பு முடிவுக்கு வந்தது. நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஒரு வார காலம், தீயணைப்பு பாதுகாப்பு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை விமான நிலையத்தில், திடீர் தீ விபத்து ஏற்பட்டால், தீயை உடனடியாக அணைப்பது, பாதிக்கப்பட்டவர்களை விரைந்து நடவடிக்கை எடுத்து மீட்பது போன்ற பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடத்தப்பட்டுள்ளது. இது ஒத்திகை போன்று தெரியாமல், தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, சென்னை விமான நிலைய தீயணைப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். அதனால் ஏற்பட்ட பரபரப்பு தான் என பிறகு தெரிய வந்தது.

பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்
சென்னை விமான நிலைய ஓடுபாதையின் மேற்கு பகுதியில் ஏதோ மர்ம பொருள் தீப்பிடித்து எரிவதும், தீயணைப்பு வண்டிகள், பாதுகாப்பு குழுவினர், மருத்துவக் குழுவினர், அதிரடிப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வருவதையும் சென்னை விமான நிலையத்திற்கு வெளியே ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பார்த்துவிட்டு பதற்றம் அடைந்தனர். பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. ஏதோ அசம்பாவித சம்பவம் என அவர்கள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு நின்று பதற்றத்துடன் பார்வையிட்டனர். பிறகுதான் சிறிது நேரத்தில் அது ஒத்திகை நிகழ்ச்சி என்று தெரிந்ததும் அமைதியாக கலைந்து சென்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில்
தீ விபத்து தடுப்பு ஒத்திகையால் பரபரப்பு: தத்ரூபமாக இருக்க திடீர் நடவடிக்கை
appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Meenambakakkum ,Fire Safety Week ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் நடப்பு...